எங்கள் கலாம்
- ஸ்ரீ ராம் குமார்
- Oct 10, 2019
- 1 min read
Updated: Nov 25, 2019

இந்தியாவின் இதயம் இன்று நின்றுவிட்டது, நாட்டினை தூக்கி நிறுத்திய நம்பிக்கை ஒளியினை இருள் தின்றுவிட்டது.
துளிகளும் வெள்ளமாகலாம்
தாள்களும் பட்டமாகலாம்
எடுத்துக்காட்டி நின்றாயே,
உம் செயற்திறனால்
எமக்கு எடுத்துக்காட்டாய் நின்றாயே
இன்று கண்ணீர்தந்து
இருள் துயரில் ஆழ்த்திச் சென்றாயே.
ஏழை நாடென ஏளனம் செய்தவரெல்லாம்
மிரண்டு போயினர் - தங்கள்
ஏவுகணை கண்டு;
அக்னிச் சிறகுகளால் - இந்தியாவை
ஆகாயம் தூக்கிச் சென்றவரே
நீங்கள் இன்றி இன்று
நாங்கள் சிறகொடிந்து போனோமே.
“இந்தியாவின் வருடமழை அளவை
நாடு முழுதும் நிரப்ப- ஒரு மீட்டர் ஆழம் வரும்”
என்றீர்.
இன்று மட்டும், இந்தியா சிந்திய
கண்ணீரின் அளவு அதனினும் அதிகம்.
நாடு முழுவதும்
உங்கள் வளர்ப்புப் பிள்ளைகள்
கண்ணீர் சிந்திக்கொண்டிருக்க
அப்பிள்ளைகளில் ஒருவனாய்
என் கவிதைத் துளியினையும்
கண்ணீர்த் துளிகளையும்
மலர்ப் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.
Comentarios